Sunday, March 3, 2024

பிரேமாவின் பெண் குழந்தை

       பிரேமாவின் மூத்த ஆண் குழந்தைக்கு முன் பிறந்த இளைய பெண் குழந்தை அவள். வயலும் சேறும் இரண்டற கலந்த ஊர். முழுதாய் மூன்றாம் வகுப்பைத்  தாண்டாதவள். அதற்காக அவரது அப்பா வெங்கட் அக்குழந்தைக்கு அடுப்படியைக் கொடுத்து அழகு பார்த்தார். கல்வியை கைவிட்டதால், தன்னம்பிக்கை - துணிச்சல் கை கூட வில்லை. பிரேமா அம்மா தவறி விட, பின் வந்த சிற்றன்னையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும் கேள்வி.


                                       

    திருமணம் ஆகி சோழம் வந்தடைந்தாள். ரயிலை கண்டது, அதில் பயணம் செய்தது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். மூன்று ஆண் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் தவறிய பெண் குழந்தை. எப்போதும் கோபப்படாத சாந்தமான முகம். வெகுளி, வெள்ளந்தி. பாசத்தைக் கூட வெளிப்படுத்த தெரியாதவள். யாரும் சிரமப்படாமல் எளிதாக ஏய்த்து விடலாம். தேவைக்கேற்ப நன்றாக ஏத்தியும் விடலாம். தந்தை சொத்தை பிரித்துத் தர மறுத்த போதும் பெரிதாக எண்ணிக் கொள்ளாதவள்.

    ஏமாளி என்றவுடன் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒட்டுக் குடிசை வீட்டில் குடியிருந்த காலம். சாமியார் போல் வேடமிட்ட ஆசாமி ஒருவர் காலனிக்குள் நுழைகிறார், நம் பெருமாட்டியைப் பார்த்து, முடிவு செய்து விட்டு " உன் புருஷனுக்கு ஒரு கண்டம் இருக்கு, அத போக்கனும்னா...." என்று சொல்லி வீட்டின் ஒரே தங்கமான அணிந்திருந்த காதணிகளை அபேஸ் செய்துவிட்டு "முக்கியமாக இதை யாரிடமும் சொல்லி விடாதே! " என்றபடி  இடத்தைக் காலி செய்தார்.


    மிக்சி, கிரைண்டர், துணி துவைக்கும் எந்திரம் என எதுவும் கிடையாது. வீட்டிற்குள் தண்ணீர் குழாய் இல்லை. அம்மிக்கல், ஆட்டுக்கல், கிணற்றங்கரை தான். நாளும் நாலு பேருக்கும் சேர்த்து துணி துவைக்க வேண்டும்.  மூன்று வேளையும் சமைத்தாக வேண்டும். கணவன் வெளியே உழைக்க, அவளோ சத்தமின்றி, சம்பளம் கேட்காமல், சோர்வில்லாமல் கிட்டத்தட்ட 18 மணி நேரம் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தாள். மிக்ஸி வாங்கியும் கூட கணவன் மிக்ஸியில் அரைத்தால் ருசி சரி இல்லை என்று சொல்ல வெகு காலம் தொடர்ந்து அம்மியில் அரைத்துக் கொடுத்த பாசக்காரி அவள்.

    அடுப்புக்கு மரத்தூளும், அரை மனுவு சவுக்கு விறகும் வாங்கி வருமாறு தன் பிள்ளைகளிடம் கெஞ்சுவதும், பிள்ளைகளோ தங்களுக்குள் நீ போ நீ போ என அடித்துக் கொள்வதும் வாடிக்கையான வேடிக்கை.  காலி பீர் பாட்டிலை அடுப்புக்குள் வைத்து முற்றிலும் மரத்தூளை கொட்டி அழுத்தி, முன்னாள் ஒரு ஓட்டையைக் குடைந்து, பின் குந்துநாப்ல சரியாமல் செருகிய  பாட்டிலை திரும்ப எடுப்பதெல்லாம் சத்தமில்லா சாதனைகள் தான். சாதம் வெந்ததும் கஞ்சி வடிக்க வைத்து விட்டு, அந்தப்  பாத்திரத்தைத் தொட்டுக்கும்பிடும் அம்மாவின் பாங்கை மகன்கள் கிண்டல் செய்வதும் சிரிப்பதும் அடடா!

பொழுதுபோக்கு என்று சொன்னால் சாயங்காலம் ஓடும் சீரியல்களும் எப்பவாவது சென்று பார்க்கும் திரைப்படங்களும் தான். பக்கத்து வீட்டில் பார்க்கத் தொடங்கிய மெட்டி ஒலி, இவர்கள் வீட்டு புது டிவியில் முடிந்தது
என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

                                  




    யாருடனும் அவ்வளவாக பேசுவது கிடையாது. அப்படியே பேசினாலும் எவ்வாறு பேச வேண்டும் என்றும் அறியாது பேசி விடுவது வழக்கம். ஒரு முறை வீட்டில் இருந்த பழைய கணினியை தெருவில் இருந்த ஒருவர் விலைக்குக் கேட்டார். மகனோ,  "அம்மா, இது நெறயா வேலை வைக்கும். வாங்கினதுக்கு அப்பறம், சரிபண்ண என்னை எல்லாம் கூப்பிடீங்க அவ்வளவு தான்!!!" என்று கறாராக சத்தியம் வாங்கிக்கொண்டு, அம்மாவும் மகனும் அந்த வீட்டில் கணினியைக் கொடுத்து விட்டு, கையில் காசை வாங்கிய அந்த கணமே, அம்மா அவர்களிடம், "இது அடிக்கடி ரிப்பேர் ஆகும். ரிப்பேர் கிப்பேர் ஆச்சின்னா பையன்ட சரி பண்ணி தரச் சொல்லி எல்லாம் கேட்கக்கூடாது" என்றாரே பார்க்கலாம். வாங்கிய அக்காவின் முகம் மாறியது.  அடி அம்மாடி, பையன் ஒரு கணம் அரண்டே போய்விட்டான்.


    சிறுவயதில் இருந்தே அனுபவித்த கொடுமைகளோ என்னவோ... மனநோய்க்கு உள்ளாகிறாள். தன் கணவன், பிள்ளை என யாரையும் நினைவில்லை. கூலித் தொழிலாளி கணவனோ ஆதரவு யாருமின்றி மனைவியைக் காப்பாற்ற கையற்றுத் தவிக்கிறார். உற்றார் உறவினர் வீட்டுகெல்லாம் சென்றும் உதவ யாரும் முன் வரவில்லை. அப்போது தான் அது நடந்தது. ஒரு பேருந்து நிலையத்தில் திடீரென்று ஓட ஆரம்பித்து விட்டாள். பேருந்து நிலையத்தின் வாசல் வழியாக சட்டென விரைந்தது ஒரு பேருந்து. கணவன் ஓடிச் சென்று ஒரு கணம் தடுக்க வில்லை என்றால் அன்றே போயிருக்க கூடும். ஒரே கூச்சல். நடந்ததை அறியாத அங்கிருந்த போலீசார் அக்கணவனை அடிக்க, பையனோ "இவரு எங்க அப்பா தான், எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதான்..." என கண்ணீர் விட, ஒரு வழியாய் அங்கிருந்து புறப்பட்டு மனைவியை அரசு மருத்துவமனையில் மனநலப்பிரிவில் சேர்த்துக்  கஷ்டபட்டுக் காப்பாற்றினார். 20 ஆண்டுகளாய் தொடர் மருந்துகள்.

                                             

    அன்பான கணவர். அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார். அவளோ அவருக்கு வேண்டிய எல்லாத்தையும் செய்துக் கொடுப்பார். மூடிகேற்ற ஜாடி. அப்பா,  மகன்களிடம் அம்மாவுக்கு பூவன் பழம் வாங்கி கொடுக்க சொல்லுவதும், எந்த நல்ல காரியம் என்றாலும் அம்மாவை எதிரில் நிற்கச் சொல்லி ஆசீர்வாதம் பெற்றுச் செல்லுமாறு சொல்வதும் அப்போது அம்மா அசடு வழிவதும்  வழக்கம்.

    பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள்.  திருமணம் செய்து வைத்தார்கள், கொண்டார்கள். பிள்ளைகள் குடும்பமானார்கள். இவர்கள் பரபரத்த காலம் போய் பிள்ளைகள் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லாக்கடமையும் முடிந்தது. வயதும் முதிர தொடங்கியது, தூக்கம் குறைந்தது. ஏக்கம் தொடங்கியது. கடைசி வரை வீட்டு வேலையும் குறைந்த பாடில்லை. சூழ்நிலை. தலைமுறை இடைவெளிக்கு பக்குவப்படாத குழந்தை மனம். ஏகப்பட்ட சிந்தனைகள், புலம்பல்கள், எத்தனையோ ஆலோசனைகள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை... வீட்டில் எல்லாரும் தூங்கி விட்டார்கள், புரண்டு புரண்டு படுக்கிறாள். தூக்கம் வராது ஒரே சிந்தனை. கணவனுக்கு முன் தான் சென்று விட வேண்டும் என்று எண்ணுகிறாள், மன அழுத்தம் பீறிடுகிறது. இயற்கை தன்னை அழைக்கும் முன்னே அவளே முந்திக்கொண்டு இந்த கொடூர வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுக் கொண்டாள். சுமார் 20 வருடங்களுக்கு முன் விடுதலை அடைய வேண்டிய உயிர் கடைசியில் மிகுந்த உடல், மன உளைச்சலுக்கு ஆட்பட்டு இறையடி சேர்ந்தது.

    ஆரம்ப காலத்தில் எல்லாம், பணக் கஷ்டத்தில் இருந்து விட்டு, அந்த நிலை மாறும் போது மனமும் அடுத்தக்கட்ட கவலையைத் தேடிக் கொள்கிறது. ஆக மொத்தத்தில் மனசுக்கு ஒரு கவலை இருந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லாம் கடந்து போகுமென சொல்ல கும்பல் உண்டு, அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்பதைச் சொல்லத்தான் யாருமில்லை...  இறப்புக்கு இதுதான் காரணம், அது தான் காரணம் என்று ஆளாளுக்கு தனக்குத் தேவையான கதையை எழுதிக்  கொண்டிருக்காமல், விதியிடம் பழியைப் போட்டு விட்டு மன அமைதித்  தேடிப் பயணப்படத்தான் வேண்டும்...

-  தஞ்சையின் அரச குமாரன் 

04 -03-2024

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...