Monday, May 29, 2023

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை

        கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும்.  கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத்  திரும்பி தந்தன. 

        எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப்  போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது.

       பிறகு எதற்குபூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை எடுத்துக் கொண்டுச் சேர்க்க அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து விடலாம். "காலேஜ் படிக்கிற பையன் தட்டு வண்டி இழுக்கக் கூடாது" என அப்பா தனது தட்டு வண்டியைக் தர மறுத்த போது தான் வண்டி இழுப்பதை நிறுத்தினான். 


தட்டு வண்டி


              மார்கழி மாத காலங்களில் பிரம்ம முகூர்த்தத்திலேயேக் கோயிலுக்குச்  சென்று அங்கே தரப்படும் சர்க்கரைப் பொங்கலுடன் சண்டை செய்தவன் அவன்.  பூரண (பௌர்ணமி)  நாட்களில் மதியம் காளிக் கோயில் அன்னதானங்களில் கலந்து கொண்டு, இல்லை இல்லை "கலந்து உண்டு" விழாவை தவறாது சிறப்பித்துக் கொடுக்கும் இராச குமாரன் அவன். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது தவறாது கோயிலுக்குச் சென்று அங்கே கொடுக்கப்படும் செங்கரும்பை இருமுறை மும்முறைப் பெற்று வீடு சேர்ப்பதை எல்லாம் வீரம் என எண்ணிக் கொண்டு இல்லாத மீசையை தொந்தரவு செய்தவன் அவன். சாமிக்குத் தெரியாமல் சிலை அருகில் இருக்கும் காரூவா, எட்டணா, யாகத்தில் உடன்கட்டை ஏறிய கருப்புக் காசுகளைத் தரையில் தோய்த்து பெட்டிக் கடைக்குக் கப்பம் கட்டிய "மிட்டாய் மிராசு" அவன்.

கோயில் முகப்பு 


கோயில் மண்டபம் 

                

பிரேமா அம்மா பூக்கடை


            செங்கற்களை மாற்றி அடுக்கி, தான் சம்பாதித்த முதல் கூலி  ரூ.2 இதே இடத்தில் தான் என்பதை எண்ணி மனதால் மண்ணைத் தொட்டான். கோயில் நுழைவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் ஆங்கில செய்தித் தாள் படிக்கும் வசீகர மீசை வைத்த குண்டு பெருசை, ரொம்ப நாள் மிலிட்டரி என நினைத்து ஏமாந்து பின் இன்ஜினியர் என அறிந்து ஏமாந்ததை ஆசையாய் அசை போட்டு அசடு வழிந்தான். ஒருமுறை தன் அப்பா குடித்து விட்டு வீட்டை விட்டு அம்மாவைப் போக சொன்ன போது இரவு 12 மணிக்கு காளிக்கோயில் வந்து அம்மாவுடன் கும்பிட்டு விட்டு ஊர் சென்ற நினைவை எவ்வளவு தடுத்து நிறுத்தியும் அவனால் முடியாது தவித்தான்.

            அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவன் ஓடி ஆடி விளையாடியது எல்லாம் இந்த வட பத்ர காளிக் கோயிலில் தான். பம்பரம், பளிங்கி, ஆபியம் மணியாபியம், பெப்பே, செதுக்கு சில்லு என அவன் கால் படாத இடமே இல்லை. கோயில் மேற்கூரையையும் விடாது, பந்து எடுக்க, பட்டம் எடுக்க என அவன் கால் வைத்து மிதித்து ஏறாத கோயில் சிலையும் இல்லை. பார்க்க பார்க்க அவன் மனது அவனை ஏதோ செய்தது. அதே பூக்காரம்மா இன்றும் அங்கே கடை போட்டிருந்தார். கதம்பமும், நெய் விளக்கும் அதன் வாசனைக் கொண்டு வருடி அவனை கிறங்கச் செய்தன.

                அப்படியே காளிக் கோயிலின் விகாரத்தின் உள்ளே சென்றவன், அந்த வட பத்ர காளியம்மனை நெருங்க நெருங்க அவனை அறியாது அவன் குழந்தை ஆனான். முன்பெப்போதும் இல்லாத ஒரு வகையான உணர்ச்சிமிக்க பேருணர்வு. ஒரு கணம் அவன் தன் உறவுகளை மறந்தான்,  உலகை மறந்தான், உயிரை  மறந்தான். நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தான். அவன் கண்கள் மூடின. அவனை அறியாமல் கைகள் மேல் கூப்பிச் சென்றன. கனமான கண்ணீர் துளிகள் கீழிறங்கி அவன் மார்பை நனைத்தன. " அம்மா! காளியம்மா!! உன்ன தேடி வந்துடேம்மா!!! என்ன பாத்துக்கம்மா!!!!"  என்றவாறே விகாரத்தின் நடுவே நின்று ஓங்கி கத்தினான். 


கோயில் விகாரம்


நிசும்பசுதனி என்கிற வடபத்ர காளியம்மன்



- தஞ்சையின் அரச குமாரன். 

30 - 05 - 2023

Tuesday, May 16, 2023

அப்பா

அறியாத வயசில என்ன எப்படியெல்லாம் கொஞ்சிருப்ப...

புரியாத வயசில என்ன எப்படியெல்லாம் பொறுத்திருப்ப...


அருகருகே இருந்தும் அமைதியாய் கடந்தோம்,

எதிரெதிரே இருந்தும் எதிரியாய் முறைச்சோம். 

நெசத்துல வில்லன் என்னவோ விடலைப் பருவந்தான். 




சின்ன வயசில செத்த மாதிரி நடிப்பியே !! நடிச்சது போதும் !!!

எந்திரிப்பா ! எந்திரிப்பா !!

"போனா தான் தெரியும் என் அருமை" அப்படினு சொல்லுவியே !

அருமை தெரிஞ்சிடுச்சி, அழுடான்னு விட்டிட்டு போயிட்டியா !!!

கோவந்தான் உன் பாசம், வேர்வை தான் உன் வாசம், பாவி மனம் அறியலயே!

அப்பா தான் எந்தலைவன் , இனிமேல இறைவன்னு எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்!!!

அப்பப்பா  ஒன்னு ரெண்டா நீ பட்ட துயரம்! ஆனா அத, எங்க ஒருத்தர்ட கூட  நீ  சொல்லலியே!!!

நான் ஏதும் தப்பா பேசியிருந்தா தவறாம மன்னிச்சிடுப்பா!!!




உன்ன கட்டி புடிச்சு முத்தம் கொடுக்க வரும் உழைப்பின் வாசனை தான் எனக்கு  வேணுமப்பா!!

முத்தம் கொடுக்கயிலே உன் தாடி தான் இனி குத்திடுமா?

செருப்பில்லாம  பொத்து போட்ட உன் காலுக்கு முதல் முத்தம் ,

காப்பு காச்சிய உன் கையிக்கு தருவேனே மறு முத்தம்... 

அந்த கையால இனியுந்தான் யார் என்னை தட்டி கொடுப்பா !!! 

காட்சிகள நான் ஓட்ட கண்ணு ரெண்டும் கலங்குதப்பா...

நடந்தத நான் நெனைக்க நா வறண்டு போகுதப்பா...

அளவில்லாம அழுவுறேன், ஒருமுறை தான் எந்திரிப்பா ! எந்திரிப்பா !!


இறுதி மரியாதை-ன்னு எல்லாரும் சொல்றாங்க ! ஆனா நான் உனக்கு ஒரு மரியாதையும் செய்யலியே!

குழந்தையா அழுவுறேன், வா, வந்து என்னை கொஞ்சி போப்பா!!

நீ என்னை பாத்துகிட்ட மாறி, என்னால உன்னை பாத்துக்க முடியலயே !!

கைமாறு என்ன செய்ய, கலங்கி மனம் தவிக்குதப்பா!!!

மனசு தான் ஏங்குது, என்ன மன்னிச்சிடுப்பா, மன்னிச்சிடுப்பா!!!





இழந்துட்டு தவிக்கிறவன் சொல்றேன் , இருக்கும் போதே இளகிடுங்க.. 

விட்டுட்டு வாடுறவன் சொல்றேன், விழும் முன்னே தாங்கிடுங்க.. 

படிப்பினை வந்த பின்னே, பாசந்தான் பொங்குதப்பா !

அப்பா ஒன்னோடு உறவாட, நெதமுந்தான்  மனசு விம்முதப்பா!!


-  தஞ்சையின் அரச குமாரன் 

15-05-2023

பி. கு. : என் அப்பா இன்றும் நலமாக உழைத்து சம்பாதித்து கொண்டிருக்கிறார். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

Monday, May 15, 2023

பேச்சுப் போட்டியும் லெடி டீச்சரும்

 2002 ஆம் ஆண்டு. 6 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறோம். 

மிகவும் சுறுசுறுப்பாக, உயரம் குறைவாக இருப்பார் லெடி டீச்சர்.  கணக்கு, ஆங்கிலம், அறிவியல் ஆகிய மூன்று பாடத்திற்கும் அவரே ஆசிரியர், வகுப்பு ஆசிரியை. 

டீச்சரின் கையழுத்து மிகவும் அழகாக இருக்கும். லெடி டீச்சர் வகுப்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆங்கில புலமை அற்புதம். எனக்கெல்லாம் ஆங்கில மோகம் ஏற்பட அவரே வித்திட்டவர். 

அவர்களின் வீடு மானம்பு சாவடி அருகில் இருக்கும் ரொட்டி கடைத் தெருவை தாண்டி இருக்கும். அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் செல்வது உண்டு. அப்போது என்னிடம் மிதிவண்டி இல்லை. நானும் நண்பர் விவேக்கும் அவர் சைக்கிளில் செல்வோம். அப்போது எல்லாம்  கையை விட்டு விட்டு  ரேஞ்சர் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம். 

                                                         

சைக்கிள் காரியரில் ஓசியில் உட்கார்ந்து வரும் எனக்கு அல்லு விடும், ஆனால் விவேக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட்டு தலைக்கு தலையணையாய் வைத்துக் கொண்டு, நான் பயப்படுவதைப் பார்த்துப் பரவசப் படுவார். 


பள்ளியில் பேச்சுப் போட்டிக்கு நாள் குறிக்கபட்டது. பிரபாகரன், பவுன் போன்றோரின்  மைதானம் பேச்சுப் போட்டி. 6 வது E பிரிவிலிருந்து யாரும் பங்கெடுக்க யாரும் முன்வரவில்லை. பார்த்தார் லெடி டீச்சர். களத்தில் இறங்கினார். கிட்டத் தட்ட இரண்டு பக்கம். முழுதும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார். அவரே எனக்கு முழுதும் பயிற்று வித்தார்.  இது மிகப் பெரிய விடயம்.



ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். பாடம் தான் நடத்தி விட்டோமே என்றிருக்கலாமே! எதற்கு இந்த மெனக்கெடல்? யார் கேட்க போகிறார்கள்? ஆங்கிலம் வேறு. அவர் மட்டுமே சொல்லிக் கொடுத்தாக வேண்டும். வெளியில் வழியில்லை. ஆகச் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே ஒரு நல்ல சமூகம் இங்கே படைக்கப் படுகிறது. அற்பணிப்பு - ஆம், இதை கட்டாயம் இவ்வாறு தான் சொல்ல முடியும். ஏக இறைவனின் பேரருள் எப்போதும் அவர்க்குண்டு. 

" நான் பேசியதோ உரை,

அதில் இருக்கலாம் சில குறை,

மன்னிப்பது உங்கள் முறை,

மீண்டும் வருவேன் அடுத்த முறை. "

என்றவாறே தன் பகுதியை நிறைவு செய்தார் நண்பர் திரு.பிரபாகரன். அவரது புடைத்த நரம்புகள் அடங்க சிறிது நேரம் பிடித்தது.

இன்னொரு புறம், நண்பர் திரு. பவுன் சீனி வாசன், தன் பங்கிற்கு மணித்துளிகளைக் கூட எண்ணாமல் வியர்வைத் துளிக் கொண்டு தன் பேச்சை முடித்தார். எப்போதும் உதவும் கைக்குட்டை அன்றி அன்று அவருக்கு துண்டு தேவைப் பட்டது.

அடுத்து நான்,

"Good evening to one and all gathered here!"

என்ற முதல் வரியை முடிக்கும் முன்னே ஒரு வழி ஆனேன். சொதப்பல். பேச்சுப் போட்டி முடிந்த பின்னும் எனது நடுக்கம் குறைய கொஞ்சம் நேரம் ஆனது.

ஆனால் மாறாக பரிசளிப்பு விழாவின் போது எனது பெயர் அறிவிக்க பட்டது. அப்போது அவர்களின் ஆறாவது வகுப்பாசிரியாக திரு. ரெக்ஸி சார் இருந்தார். பின்பு சமாதானம் பேசப்பட்டு பரிசாக தரப்பட்ட டிபன் பாக்ஸ்-ஐ தந்து விட்டேன். ஆனால் இன்றும் அந்த நிகழ்வை மறக்க விடாத பரிசு சான்றிதழ் என்னிடம் இருக்கிறது.


#நெகிழ்வு_பதிவுகள்

-  தஞ்சையின் அரச குமாரன் 






Sunday, May 14, 2023

மூன்றாம் வகுப்பு - செல்வராணி டீச்சர்

 அப்போது நாங்கள் மூன்றாம் வகுப்பிற்கு வந்திருக்கிறோம்.

தரை சீட்டிலிருந்து பெஞ்சுக்கு மாறிய நேரம். கற்பலகை(சிலேட்), கற்பலகை குச்சியில் இருந்து நோட்டு பென்சிலுக்கு தாவின எங்களது சிறு விரல்கள்.

திருமதி. செல்வ ராணி ஆசிரியை எங்களுக்கு அப்போது வகுப்பாசிரியராக இருந்தார். எங்கள் வகுப்பு ஆண்கள் ஆசிரியர் ஓய்வறைக்கு அருகே அமைந்திருந்தது.

எங்களை அ, ஆ மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை நோட்டில் எழுதுமாறு பணித்தார். அனைவரும் எழுதினோம். ஆசிரியர் ஒவ்வொருவர் நோட்டாக பார்த்து கொண்டே வந்தார். அப்போது நண்பர் மணி கண்ட பிரபு நோட்டையும் எனது நோட்டையும் பார்த்து விட்டு எழுத்து அழகாக உள்ளது என்று கூறினார். அத்தோடு நிற்காமல் அனைத்து ஆசிரியர்களிடமும் எங்கள் நோட்டை காண்பித்து, "பாருங்கள் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள்" என்று பரப்புரையே செய்து விட்டார்.

அன்று அவர் செய்து வைத்த அந்த ஊக்க துவக்கம், இன்று வரை எங்களை ஓட வைக்கின்றது.

அவர் அடுத்த வகுப்பிற்கு சென்று வருவதற்க்குள் ஒரு வேடிக்கையும் நடந்து விட்டது. மற்ற மாணவர்கள் எனது நோட்டை பார்த்து எழுதி கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் எனது எழுத்து சரியாக தெரியவில்லை என கூற, நானோ மேல் எழுதி, மேல் எழுதி, நோட்டை ஒரு வழி ஆக்கிவிட்டேன். திரும்ப வந்து திருமதி. செல்வ ராணி ஆசிரியை என்னை கடிந்து கொண்டது இன்றளவும் என்னை விட்டு அகல வில்லை.

எனது திருமண விழாவில் அதே திருமதி. செல்வ ராணி ஆசிரியை அவர்களும், தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா ஆசிரியை அவர்களும் வந்திருந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உச்சம்.

#நெகிழ்வு_பதிவுகள்

- இராஜ் குமார் பக்தவச்சலம்



பவுனின் குழந்தை உள்ளம்

கட்டாயம் அப்போது நான் ஐந்தாம் வகுப்பிற்கு கீழே படித்து கொண்டிருக்க வேண்டும்.

திரு. கலை மோகன் என்று ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்தார். அன்பானவர். முன் வரிசையில் ஒரு பல் அவருக்கு பூச்சி பல்லாக இருக்கும் என்று நினைவு.

1. அப்போது வெள்ளி கிழமை தோறும் முதல் வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும். எனவே அவர் வருகையை பதிவு செய்து விட்டு பின் கிடைக்கும் சொற்ப மணித்துளிகளே எங்களுக்கு விளையாட கிடைக்கும். அதிலும் அவர் ஒரு வித்தியாசமான முறையை கையாள்வார். ஒவ்வொரு பெயருடனும் ஏதேனும் ஒரு பெயரை விளையாட்டாக இணைத்து அழைத்து வருகையை பதிவார்.

உதாரணமாக...

ஆசை தம்பி என்பதை "ஆசை தம்பி தோசை கொண்டா" என்பார்.

பிரதாப் என்பதை "பிரதாப் போத்தன்" என்பார்.

முழு வகுப்பும் அவர் அழைக்கும் தொனி கண்டு ரசிக்கும் மகிழும். இவை அனைத்தும் ABCD மரம் (புங்க மரம்) அருகில் நடக்கும்.




2. அடுத்து அனைவரும் விளையாட ஆயத்தம் ஆவோம். ஒரு கால்பந்து. இருவர் இருவராக விளையாட வேண்டும். நடு மைதானத்தில் பந்து வைத்து இருவரில் யார் கோல் அடிக்கிறார்களோ அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

துயர நிலை என்னவென்றால் இருவரில் யாரேனும் ஒருவர் நாட் கோல் அடித்தால் இருவரும் தகுதி நீக்கம் பெறுவார்கள்.

எனக்கு பவுன் சீனி வாசன் என்று ஒரு நல்ல நண்பர் உள்ளார். இன்றும் நட்பு பாராட்டுகிறவர். பெரும்பாலும் அவருடனே நான் விளையாட கூடும். அவர் நாட் கோல் அடிப்பதை வழக்கமா செய்வார், அடித்துவிட்டு மகிழ்ச்சி கொள்வார். அப்போது நான் கோபப்பட்டிருந்தாலும் இன்று நினைத்தால் என்ன இனிமை. சிறு பிள்ளை தனங்கள் தான் என்னே அழகு!



நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க ஒரு மென்பொருள் இருந்தால், எவ்வளவு இனிதாக இருக்கும்...

# நெகிழ்வு பதிவுகள்.

-இராஜ் குமார் பக்தவச்சலம்.



காது புடி வாத்தியார்

 காது புடி வாத்தியார் என்று பயத்துடன் அழைக்கப்பட்ட சாலமன் அய்யாவின் காது பிடிக்கு தப்பிய காதுகளும் உண்டோ?

ஒருமுறை ஐந்தாம் வகுப்பில், வகுப்பு வேளையில் ஓசி tit bits தின்றதால் மாட்டி கொண்டேன்.

இன்னொரு முறை 7 ஆம் வகுப்பில் காப்பி அடித்ததிற்காக, நீ நான் என ஒருவரை ஒருவர் கை காட்ட முழு வகுப்பும் மாட்டி கொண்டு முழிக்க, முழு பள்ளிக்கும் பின் உதாரணம் ஆனோம்.

யப்பா காது, இன்னா வலி வலிக்கும்.

மறக்க முடியுமா அத்திருகு நாட்களை?






செல்லையா சாரும், நானும் - பகுதி 1

 8 ஆம் வகுப்புக்கு அவரே எங்கள் வகுப்பாசிரியர் அப்போது அவரே கீழவாயில் பிரிவிற்கு உதவி தலைமை ஆசிரியரும் கூட. அவர் அன்புக்கு பாத்திரமாக நேர்ந்தது.

தலைமை ஆசிரியர் அறையில், அநேக நாட்கள் அவருடனே மதிய உணவு உண்பேன். மன்னிக்கவும் அவருடைய மதிய உணவை உண்பேன், ஏன் என்றால் அப்போது பெரும்பாலோனோர் சத்துணவு வாசிகளே.

கடலை எண்ணெய் சமையல். சுவைக்கு பஞ்சமிருக்காது.

அவர் வீட்டிலிருந்து உணவு எடுத்து வராத நேரங்களில் வஹாப் கடையில் பரோட்டோ வாங்குவது வழக்கம்.

அப்போதும் எனக்கும் 2 பரோட்டோ வாங்கி தருவார்.

அவர் அன்பு விசித்திரமானது...

தாக்கம் 1:

என் நெருங்கிய வட்டம், என்னை ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொண்டாய் என்று கேட்கும் போதெல்லாம், செல்லையா சார் என்னுள் வந்து அவர்களிடத்தில் இவ்வாறு சொல்லி செல்வார்.

"Eleven fools are playing and Eleven thousand People are watching".

- அரச குமாரன் பக்தவச்சலம். (இராஜ் குமார் பக்தவச்சலம்)



செல்லையா சாரும், நானும் - பகுதி 3

 அறிவியல் கண்காட்சி:

பள்ளி நாட்களில் அறிவியல் கண்காட்சியை அறியப்படாதோர் இருக்க வாய்ப்பில்லை. 2004 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி வடக்கு வாசலில் உள்ள மெயின் பிரான்ச் ஸ்கூலில் நடக்க விருந்தது.

செல்லையா சாரின் தலைமையில் நாங்கள் இரு தயாரிப்பு என முடிவெடுத்தோம். ஒன்று காற்றாலை மின்சார மாதிரி. மற்றொன்று சொந்த FM ஸ்டேஷன். காற்றாலை மின்சார மாதிரிக்காவது ஒரு யோசனை இருந்தது. FM ஸ்டேஷன் எல்லாம் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். செல்லையா சார் தான் எல்லாம்.



தேவையான அனைத்து பொருட்களையும் தஞ்சையின் எலக்ட்ரானிக்ஸ் ஹப் ஆன தெற்கு வீதியில் வாங்கினோம். கிட்ட தட்ட இரண்டு வாரங்கள். இரு குழுக்களாக தினசரி வகுப்பு முடிந்ததும் இரவு 9 மணி வரை இதற்கான வேலையில் இருப்போம். FM ஸ்டேஷன் எல்லாம் வேற லெவல். நாங்கள் நேரடி ஒளிபரப்பில் பேசியதை எல்லாம் FM ஸ்டேஷன் வாயிலாக கேட்டதை எல்லாம் முடியாது மறக்க...

ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு கண்டுபிடிப்புகளுடன் மெயின் ஸ்கூலுக்கு சென்றோம். அறிவியல் கண்காட்சியை அப்போதைய தஞ்சையின் ஆட்சியர் திரு. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,(இன்றைய சுகாதார துறை முதன்மை செயலர்) வந்து பார்வையிட்டதாக ஒரு ஞாபகம்.


தொடர்ந்து தினத்தந்தி செய்தி இதழில் இருந்து வந்து புகைப்படமும் பேட்டியும் எடுத்தார்கள். செய்தி தாளில் நம் போட்டோ வருவதெல்லாம் அலாதி சுகம். என்னவாக விரும்பாதாக கேட்ட கேள்விக்கு கப்பல் படை மாலுமி என்றேன். சிரிப்பு. நானோ இன்று வரை பூங்காக்களில் உள்ள மிதிபடகை விட வேறெதிலும் சென்றதில்லை.



திரும்பி வந்த ஆட்டோவில் ஆட்டோ டிரைவர் செல்லையா சாரிடம் பேசி கொண்டே வந்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் செல்லையா சாரின் பதில் வியப்பளித்தது. வடக்கு வீதியில் தொடங்கிய இந்த பேச்சு வெள்ளை பிள்ளையார் கோவில் வரை தொடர்ந்தது.


ஒவ்வொரு முறை அவர் பதில் சொல்லி முடித்த பின் நானோ "சார் நீங்க எங்கயோ போய்ட்டிங்க!" என்றவாறே பட வசனத்தை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தேன். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர்-ம் "சார் எங்கயும் போல இங்க தான் இருக்காரு" என்றவாறே வந்தார். ஆம் உண்மை தான். நம் செல்லையா சார் நம்மை விட்டு எங்கும் போகவில்லை, நாமாக நமக்காக நம்முடனே வாழ்ந்து கொண்டே இருப்பார்.




திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

 ஒரு முறை, உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு என்று நினைவு. அப்போது தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா அவர்கள் என்னை அழைத்து மேடை ஏற்றி விட்டார்கள்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்து கொண்டிருந்தது. மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு திருக்குறள் சொன்னாலே மூன்றாம் பரிசு நிச்சயம் என புளகாங்கிதம்(பேருவகை) அடைந்தேன்.

முதலில் வந்த மணி கண்ட பிரபு 55 திருக்குறட்களை சொன்னார். அடுத்து வந்த நண்பர் 18 குறட்களைச் சொல்லிச் சென்றார். நானோ எந்த வித ஒத்திகையும் இல்லாமல் தொடங்கினேன். அப்படி இப்படி 14 குறட்களைச் சொன்னேன். குறைவான குறட்களை சொல்லியும் உச்சரிப்பு மற்றும் நிறுத்தம் ஆகியவற்றிற்க்காக இரண்டாம் பரிசு பெற்றேன். சான்றிதழும் லஞ்ச் பாக்ஸும் கிடைத்தது.


"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு." (424)


விளக்கம்: கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும் அறிவு ஆகும்.






செல்லையா சாரும் நானும் - பகுதி 2

அலுவலக அரசியலை (Office Politics) நான் அறிந்திராத காலம் அது.

நண்பர்களுக்கு தோட்ட வாத்தியார் மோகன்ராஜ் சாரும், ஓவிய ஆசிரியர் பெஞ்சமின் அவர்களையும் நினைவிருக்கலாம்.

செல்லையா சாரை வெகுவிற்கு பிடித்த அதே சமயம், சிலர் அவர் மீது கருத்து முரண் கொண்டிருந்ததும் இயல்பே.

ஆங்கிலம் ஒரு அருமையான மொழி என்று அடிக்கடி செல்லையா சார் சொல்லுவார். உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மிகை ஆர்வம் ஏற்பட செல்லையா சாரும், 6 ஆம் வகுப்பு திருமதி லீதியால் ஆசிரியையும், 9 & 10 வகுப்புகளில் ஆங்கில ஆசிரியை திருமதி பிரேமா அவர்களும் காரணம்.

ஒரு நாள், ஓவிய வகுப்பின் போது, பெஞ்சமின் ஆசிரியர் அவர்கள், ஓவியத்தை விடுத்து, பேச்சு போட்டியின் நடுவரானார்.

"தமிழே! ஆங்கிலமே!" என்பதே தலைப்பு.

தமிழ் அணியில் நான் நிற்க, வாதத்திற்கு வலு சேர்க்க, வம்படியாக செல்லையா சாரின் பெயரை இழுத்தேன். "நாம் அனைவரும் தமிழ் மொழியை விரும்ப வேண்டும். ஆங்கிலம் ஆங்கிலம் என்று அதன் பின்னால் செல்ல கூடாது" என்றேன். இதற்கு ஓர் வழியில் தமிழம்மா திருமதி ஸ்டெல்லா அவர்களும் காரணம். தமிழ் மொழி உச்சரிப்பில் அசத்துவார். வாசிப்பில் எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தொடர வேண்டும் என்பதை என்னுள் இறக்கியர் அவரே.

இன்றைய இணையத்தை விட மின்னல் என பாய்பவர்கள் என் நண்பர்கள். நான் வகுப்பறைக்கு திரும்பும் முன்னே, இந்த செய்தி புரவி அன்ன விரைந்து பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செல்லையா சாரின் அதீத அன்பைப் பெற்றேன். ஆம். கிட்ட தட்ட ஒன்றரை மாதங்கள் அவரது வகுப்புகளில் வெளியே நின்றேன். அழுகை வரும். இருப்பினும் எப்போது அவர் என்னிடத்தில் முன்பு போல் நடந்து கொள்வாரா என்று ஏங்கலானேன். மீண்டும் என்னிடம் அன்பு பாராட்ட தொடங்கினார். ஊடல் என்பதற்கு தமிழில் பொய்ச்சினம் என்றும் ஒரு பொருள் உண்டு.

ஆரவாரம் :

~~~~~~~~~

கால்பந்து மைதானத்தின் நடுவே, அடிக்கடி ஆசிரியர்களும் பெற்றோர்களும் செல்வது தவிர்க்க முடியாதது. செல்லையா சார் சென்றால் அவர் எங்களிடம் பந்தை வாங்கி வானுயர அடிப்பது வழக்கம். அப்போது எங்களது ஆர்பரிப்பை கீழ வாசல் சாலையில் செல்பவர்கள் ஒதுக்கி விட முடியாது. உண்மையில் சில சமயம் அவர் அடிக்க மறுப்பார். நாங்கள் அடம் பிடித்து அடிக்க சொல்வோம். இனி ஒருபோதும் அக்காலம் திரும்பி வராது.

தலைமுறை தாண்டிய அன்பு

-----------------------------------

என் தந்தையிடம் செல்லையா சாரை பற்றி பேசும் போதெல்லாம், அவர் "ரொம்ப நல்ல மனுஷன்டா அவரு" என்பார். கூடுதலாக செல்லையா சார், நான் ஸ்கூல் படிக்கும் போது எனக்கே கிளாஸ் எடுத்தவர்டா என்று தலைமுறை தொடர்ந்த அவரது பணியின் உன்னதத்தை உணர்த்துவார்.



(படத்தில் செல்லையா சாரின் பக்கத்தில் இருப்பவர் தோட்ட வாத்தியார் மோகன்ராஜ் சார்)

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...