Monday, May 15, 2023

பேச்சுப் போட்டியும் லெடி டீச்சரும்

 2002 ஆம் ஆண்டு. 6 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறோம். 

மிகவும் சுறுசுறுப்பாக, உயரம் குறைவாக இருப்பார் லெடி டீச்சர்.  கணக்கு, ஆங்கிலம், அறிவியல் ஆகிய மூன்று பாடத்திற்கும் அவரே ஆசிரியர், வகுப்பு ஆசிரியை. 

டீச்சரின் கையழுத்து மிகவும் அழகாக இருக்கும். லெடி டீச்சர் வகுப்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆங்கில புலமை அற்புதம். எனக்கெல்லாம் ஆங்கில மோகம் ஏற்பட அவரே வித்திட்டவர். 

அவர்களின் வீடு மானம்பு சாவடி அருகில் இருக்கும் ரொட்டி கடைத் தெருவை தாண்டி இருக்கும். அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் செல்வது உண்டு. அப்போது என்னிடம் மிதிவண்டி இல்லை. நானும் நண்பர் விவேக்கும் அவர் சைக்கிளில் செல்வோம். அப்போது எல்லாம்  கையை விட்டு விட்டு  ரேஞ்சர் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம். 

                                                         

சைக்கிள் காரியரில் ஓசியில் உட்கார்ந்து வரும் எனக்கு அல்லு விடும், ஆனால் விவேக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட்டு தலைக்கு தலையணையாய் வைத்துக் கொண்டு, நான் பயப்படுவதைப் பார்த்துப் பரவசப் படுவார். 


பள்ளியில் பேச்சுப் போட்டிக்கு நாள் குறிக்கபட்டது. பிரபாகரன், பவுன் போன்றோரின்  மைதானம் பேச்சுப் போட்டி. 6 வது E பிரிவிலிருந்து யாரும் பங்கெடுக்க யாரும் முன்வரவில்லை. பார்த்தார் லெடி டீச்சர். களத்தில் இறங்கினார். கிட்டத் தட்ட இரண்டு பக்கம். முழுதும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார். அவரே எனக்கு முழுதும் பயிற்று வித்தார்.  இது மிகப் பெரிய விடயம்.



ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். பாடம் தான் நடத்தி விட்டோமே என்றிருக்கலாமே! எதற்கு இந்த மெனக்கெடல்? யார் கேட்க போகிறார்கள்? ஆங்கிலம் வேறு. அவர் மட்டுமே சொல்லிக் கொடுத்தாக வேண்டும். வெளியில் வழியில்லை. ஆகச் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே ஒரு நல்ல சமூகம் இங்கே படைக்கப் படுகிறது. அற்பணிப்பு - ஆம், இதை கட்டாயம் இவ்வாறு தான் சொல்ல முடியும். ஏக இறைவனின் பேரருள் எப்போதும் அவர்க்குண்டு. 

" நான் பேசியதோ உரை,

அதில் இருக்கலாம் சில குறை,

மன்னிப்பது உங்கள் முறை,

மீண்டும் வருவேன் அடுத்த முறை. "

என்றவாறே தன் பகுதியை நிறைவு செய்தார் நண்பர் திரு.பிரபாகரன். அவரது புடைத்த நரம்புகள் அடங்க சிறிது நேரம் பிடித்தது.

இன்னொரு புறம், நண்பர் திரு. பவுன் சீனி வாசன், தன் பங்கிற்கு மணித்துளிகளைக் கூட எண்ணாமல் வியர்வைத் துளிக் கொண்டு தன் பேச்சை முடித்தார். எப்போதும் உதவும் கைக்குட்டை அன்றி அன்று அவருக்கு துண்டு தேவைப் பட்டது.

அடுத்து நான்,

"Good evening to one and all gathered here!"

என்ற முதல் வரியை முடிக்கும் முன்னே ஒரு வழி ஆனேன். சொதப்பல். பேச்சுப் போட்டி முடிந்த பின்னும் எனது நடுக்கம் குறைய கொஞ்சம் நேரம் ஆனது.

ஆனால் மாறாக பரிசளிப்பு விழாவின் போது எனது பெயர் அறிவிக்க பட்டது. அப்போது அவர்களின் ஆறாவது வகுப்பாசிரியாக திரு. ரெக்ஸி சார் இருந்தார். பின்பு சமாதானம் பேசப்பட்டு பரிசாக தரப்பட்ட டிபன் பாக்ஸ்-ஐ தந்து விட்டேன். ஆனால் இன்றும் அந்த நிகழ்வை மறக்க விடாத பரிசு சான்றிதழ் என்னிடம் இருக்கிறது.


#நெகிழ்வு_பதிவுகள்

-  தஞ்சையின் அரச குமாரன் 






No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...