Sunday, May 14, 2023

மூன்றாம் வகுப்பு - செல்வராணி டீச்சர்

 அப்போது நாங்கள் மூன்றாம் வகுப்பிற்கு வந்திருக்கிறோம்.

தரை சீட்டிலிருந்து பெஞ்சுக்கு மாறிய நேரம். கற்பலகை(சிலேட்), கற்பலகை குச்சியில் இருந்து நோட்டு பென்சிலுக்கு தாவின எங்களது சிறு விரல்கள்.

திருமதி. செல்வ ராணி ஆசிரியை எங்களுக்கு அப்போது வகுப்பாசிரியராக இருந்தார். எங்கள் வகுப்பு ஆண்கள் ஆசிரியர் ஓய்வறைக்கு அருகே அமைந்திருந்தது.

எங்களை அ, ஆ மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை நோட்டில் எழுதுமாறு பணித்தார். அனைவரும் எழுதினோம். ஆசிரியர் ஒவ்வொருவர் நோட்டாக பார்த்து கொண்டே வந்தார். அப்போது நண்பர் மணி கண்ட பிரபு நோட்டையும் எனது நோட்டையும் பார்த்து விட்டு எழுத்து அழகாக உள்ளது என்று கூறினார். அத்தோடு நிற்காமல் அனைத்து ஆசிரியர்களிடமும் எங்கள் நோட்டை காண்பித்து, "பாருங்கள் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள்" என்று பரப்புரையே செய்து விட்டார்.

அன்று அவர் செய்து வைத்த அந்த ஊக்க துவக்கம், இன்று வரை எங்களை ஓட வைக்கின்றது.

அவர் அடுத்த வகுப்பிற்கு சென்று வருவதற்க்குள் ஒரு வேடிக்கையும் நடந்து விட்டது. மற்ற மாணவர்கள் எனது நோட்டை பார்த்து எழுதி கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் எனது எழுத்து சரியாக தெரியவில்லை என கூற, நானோ மேல் எழுதி, மேல் எழுதி, நோட்டை ஒரு வழி ஆக்கிவிட்டேன். திரும்ப வந்து திருமதி. செல்வ ராணி ஆசிரியை என்னை கடிந்து கொண்டது இன்றளவும் என்னை விட்டு அகல வில்லை.

எனது திருமண விழாவில் அதே திருமதி. செல்வ ராணி ஆசிரியை அவர்களும், தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா ஆசிரியை அவர்களும் வந்திருந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உச்சம்.

#நெகிழ்வு_பதிவுகள்

- இராஜ் குமார் பக்தவச்சலம்



No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...